Friday, March 18, 2016

ஷைலஜா என்று ஒரு தோழி...!

கடலால் பிரித்து மனதால் நெருங்கி இருக்கும் சில தோழமைகளும் உறவுகளும் கிடைத்தது தான் இந்த இணைய வெளியில் இத்தனை காலம் சுற்றி வந்ததில் எனக்கு கிடைத்த ஒரே ஒரு நல்ல விசயம்...
அப்படிக் கிடைத்த  பொக்கிஷமான உறவுகளில்  அறிமுகமான முதல் பின்னூட்டத்திலிருந்து இன்று வரை  அதே துள்ளல்..அதே ஜோவியல் அதே இனிமை அதே அன்பு அதே நட்போடு  இருக்கும் ஒரு ஆத்மா என் மனதுக்கு மிகப் பிடித்த ஷைலஜா!
இணையத்தில்  மனதுக்கு மிக நெருங்கியவர்களுடன் ஏதோ ஒரு புள்ளியில் முரண்பட்டு, விவாதித்து , கோபித்து , வாதாடி , முகத்தை தூக்கி வைச்சு, மனம் நொந்து ...சிலரால் மறக்கப்பட்டு , சிலரால் கவனிக்கப்படாமல் , பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு வலம் வருவது  சகஜம் எல்லோருக்கும் .. 

ஆனால் இந்த வினாடி வரை அப்படி ஒரு  கீறல் எதுவுமில்லாமல் எல்லோருடனும் ஜோவியலாக குறும்பாக நல்ல ஒரு தோழியாக  எல்லாராலும் விரும்பப்படும் ஒரு ஆத்மாவாக சைலஜாவை தான் பார்த்து வருகிறேன்....அந்த வகையில் ஷைலஜா மேல் ஒருவித ஈர்ப்பு, மலைப்பு கூடவே சின்ன பொறாமையும் எனக்கு இருக்கிறது.
அவருடைய மைபா வின் ஏகோபித்த ராயல்டி உரிமை எனக்கே எனக்கு என்று உரிமையுடன் நான் கொண்டாடும் அளவுக்கு  அந்த மைபா என்ற வார்த்தையை வைத்து எத்தனை மொக்கைகள் இதுவரை போட்டேன் என்று எனக்கே தெரியாது....ஆனால் சைலஜா என்ற பெயர் வந்தால் கூடவே ஒரு தடவையாவது  அந்த மைபா (மைசூர் பாகு)  என்ற வார்த்தை இல்லாமல் ஒரு உரையாடலையாவது நானும் ஷைலஜாவும் நடத்தியிருப்போமா என்றால் இல்லை என்று ஆணித்த்ரமாக சொல்லலாம்....
இணையத்தில் முத்தமிழ் குழுமத்தின் மூலம் நட்பாகி, முக்குழும சந்திப்பு திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் உதவி , ஆலோசனைகள் தந்து, தொடர்ந்து பொங்கல் தினம் , மகளிர் தினம், சுதந்திர தினம் போன்ற விஷேஷ நாட்களில் சிஃபி , விகடன்.காம் போன்ற வெளிகளில் என்னை என் எழுத்து மூலம் நுழைத்து.....இப்படி பல விசயங்களில் நெருங்கி சட்டென்று மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டார்..
ஒரு பிரபலமான எழுத்தாளரின் மகள் என்றோ , 200 சிறுகதைகளுக்கும் மேல் எழுதிய் எழுத்தாளர் ஷைலஜா என்றோ எனக்கு அப்போது தெரியாது....அப்படி ஒரு அடையாளத்துடன் என்னை அவர் இதுவரை நெருங்கியதும் இல்லை... அப்படியொரு பிரபலமானவரா என்று நான் மலைத்து போன போதும் கூட அட சும்மா இருங்க சுவாதி என்று அசால்டாக தோளில் கை போட்ட ஒரு தோழி...!
கவிதைக்கு கவிதையாக போட்டிக் கவிதை எழுதி நாங்கள் இருந்த கவிதை இழைகளும், மொக்கை இழைகளும்....இப்பவும் முத்தமிழ், பண்புடன் ,பிரவாகம் குழுமங்களில் இருக்கிறது....எங்களுடைய சில இழைகள்  அந்த நாட்களில் அதிகப்படியான பின்னூட்டங்களால் நிரம்பியவை என்ற பெருமையும் இருக்கிறது... இப்போதெல்லாம் , சாதி , மதம், இனம் போன்ற விசயங்களில் நடக்கும் சண்டைகள் தான் இழைகளாக வளர்ந்து கிடக்கின்றன... ஆனால் நாங்கள் இவை எதுவுமில்லாமலே மிகச் சிறந்த ஜனரஞ்சகமான இழைகளில் புகுந்து விளையாடியிருக்கிறோம் என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறோம்..
இப்படி ஒரு தோழியை எப்போதாவது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று பல தடவை கவலைப்பட்டதுண்டு...
அந்த நாளும் வந்தது.. 
ஒரு வசந்த காலத்தின் ஒரு நாள்  ஷைலஜா எங்கள் வீட்டுக்கு வந்தார். கூடவே   சங்கர் அண்ணா, அண்ணி , சிவ சிவ ஐயா என்று எங்களுக்கு பிரியமானவர்களியும் கூட்டி வந்தார். அந்த மாலைப் பொழுதில் இவர்கள் எல்லாருடனும், ஸ்கைப் வழியாக சுதனி விஜியுமாக கழிந்த அந்த  மணித்துளிகள் மிக மிக அற்புதமானவை...வீட்டில் எல்லார் மனதிலும் குடி புகுந்த தேவதை!
பாட்டும், கும்மாளமுமாய் என்னவொரு இனிமையான நாள் அது? அதன் பின் அட்லாண்டி சிட்டி கஸினோவில் ஒரு  நாள் பொழுது...பின் ஒரு நாள் இரவு எங்கள் வீட்டில் தங்கி அடுத்த நாள் எங்கள் வீட்டில் கோலம் போட்டு, கடைத்தெருவெல்லாம் சுற்றி...  ம்ம்ம்ம்ம்  பிரிவுகளின் திகதி நிச்சயிக்கப்பட்ட சந்திப்பு அது...!
என் தோழி ஷைலஜா.... !
:)
அந்த நட்பின் பொக்கிஷத்துக்கு இன்று பிறந்தநாள்...!
எங்கள் தோழி இலக்கியத்தின் பன் முகங்களில் இன்னும் பல வெற்றிகள் கண்டு. வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

3 comments:

  1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. வாழ்க நட்பு

    ReplyDelete
  3. இனியநட்புக்கு உதாரணமே சுவாதிதான்.. நன்றி தோழி!

    ReplyDelete